பதிவு செய்த நாள்
31
ஆக
2016
12:08
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், முனியப்பன் கோவில் அருகே இந்து முன்னணி சார்பில், 208 விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 1,008 விநாயகர் சிலைகள், இந்து முன்னணி சார்பில் தயாரிக்கப்படுகிறது. கடந்தாண்டு எந்தெந்த இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டதோ, அதே இடத்தில் இவ்வாண்டும் சிலைகள் வைக்க அனுமதி பெற்றுள்ளனர். இதற்காக, ஈரோட்டில், 208 சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகின்றன.இதுபற்றி, இந்து முன்னணி அசோக்குமார் கூறியதாவது: இங்கு, 11 அடி உயர மூல விநாயகர், கைலாய விநாயகர், பாகுபலி விநாயகர், தசாவதாரம் விநாயகர், சிவவிநாயகர், சிம்ம விநாயகர், முருகவிநாயகர், நாட்டிய விநாயகர், நந்தி விநாயகர், திண்டில் அமர்ந்த நிலை விநாயகர், ஓம் விநாயகர் சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு, சம்பத் நகரில் வைக்க, 11 அடி உயரத்தில் மூல விநாயகர் சிலையும், பிற இடங்களில், 3, 5, 7, 9 அடி உயரத்திலான சிலைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. காகிதக்கூழ், கிழங்கு மாவு, தேங்காய் நார்களில் தயாரித்து, இயற்கை சாயம் பூசப்படுகிறது. இன்று முதல் இச்சிலைகள் அந்தந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, 5ம் தேதி காலை அந்த இடங்களில் வைக்கப்பட்டு, பூஜை நடக்கும். அனைத்து சிலைகளும், 8ம் தேதி கரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.