பதிவு செய்த நாள்
29
செப்
2011
11:09
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அங்காள பரமேஸ்வரி, மாசாணி அம்மன் கோவிலில் 100வது மாத ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. ஆலங்குடியில் உள்ள மாசாணி அம்மன் கோவில் பொள்ளாச்சி மாசாணி அம்மனுக்கு அடுத்தபடியாக இங்கு மிகவும் சிறந்து விளங்குகிறது. இதேபோல அங்காளபரமேஸ்வரி கோவிலில் மாதம் தோறும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ விழா நடக்கும். இதேபோல 100வது மாத ஊஞ்சல் உற்சபவ விழா கோலாகலமாக நடந்தது. திருமணமாகதவர்களுக்கு திருமண தடைநீங்கவும், குழந்தை இல்லாதவர்கள் மகப்பேறு பெறவும், கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சுகபிரசவம் நடக்கவும், சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்டது. மாசாணி அம்மன் முன் உள்ள யாகசாலையில் மிளகாய், நெய், பழங்கள் கொண்டு வேள்வி பூஜையும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இதர பகுதி பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். அங்காளபரமேஸ்வரி, மாசாணி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.