பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி 3 வது சனிவார விழாவையொட்டி சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உற்சவர் தவழும் கண்ணன் அலங்காரத்தில் ஊஞ்சலில் அருள்பாலித்தார். ஆண்டாள் யசோதையாக கண்ணனுக்கு வெண்ணெய் கொடுத்த படி காட்சியளித்தார். மூலவர் பரமஸ்வாமிக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருப்பதி அலங்காரமும், உற்சவர் மற்றும் பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்துடன் பூப்பந்தலில் அருள்பாலித்தனர். பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் புனிதப்புளி ஆஞ்சநேயருக்கு வெள்ளிக் கவச அலங்காரமும், இரவு வடை மாலை சாற்றி சிறப்பு தீபாராதனையும் நடந்தது. பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.