பதிவு செய்த நாள்
17
அக்
2016
06:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலாமாத பிறப்பு தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
கங்காதேவி முதலான அனைத்து புன்னிய நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டிய போது பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் பாவச் சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கி வருகிறது. அவ்வளவு பெருமை மிக்க துலா உற்சசவம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் ஐப்பசி(துலா மாதம்)மாதம் பிறப்பை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, பரிமளரங்கநாதர் சுவாமி ஆகிய ஐந்து சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் காவிரி துலாக்கட்டத்தின் இருகரைகளிலும் எழுந்தருளின.
காவிரிக்கரையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த துலாமாத பிறப்பு தீர்த்தவாரியில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் காவிரியில் போதிய தண்ணீர் இன்றி புனி த நீராட முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகினர். முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், நவம்பர் 6ம் தேதி திருக்கொடியேற்றமும், 12ம் தேதி திருக்கல்யாண உற்சவமும்,14ம் தேதி திருத்தேரோட்டமும், நவம்பர் 15ம் தேதி கடைமுக தீர்த்தவாரி உற்சசவமும் நடைபெறுகிறது.