பதிவு செய்த நாள்
18
அக்
2016
11:10
குறிச்சி: மதுக்கரை மார்க்கெட் பெரிய விநாயகருக்கு, மழை வேண்டி ஜல அபிஷேகம் நடந்தது. கோவையில், தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவு, விவசாயம் பாதிப்பு, குடிநீர் பிரச்னை போன்றவை ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மழை வேண்டி, மதுக்கரை மார்க்கெட் பெரிய விநாயகருக்கு ஜல அபிஷேகம் செய்ய, மக்கள் முடிவு செய்தனர். நேற்று காலை, கோவிலின் மூலஸ்தானத்துக்கு செல்லும், தண்ணீர் வெளியேறும் வழி அடைக்கப்பட்டது. நான்கடி உயரத்துக்கு, 3,000 லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்டு, விநாயகருக்கு தீபாராதனை வழிபாடு நடந்தது. ஒன்றரை மணி நேரத்துக்கு பின், தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. திரளானோர் பங்கேற்று, வினாயகரை வழிபட்டனர்.