பதிவு செய்த நாள்
03
அக்
2011
11:10
ஈரோடு; ஈரோட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியடிகள் கோவிலில், 15ம் ஆண்டு காந்தி ஜெயந்தி திருவிழா நடந்தது.இந்திய அளவில், தேசப்பிதா மகாத்மா காந்திக்கு, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, செந்தாம்பாளையம் என்ற கிராமத்தில், 1997ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில், காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபாய் ஆகியோர் மூலவராக வீற்றிருக்க, ராஜகோபுரம், மகா மண்டபத்துடன் கூடிய கோவிலாக அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போலவே, இங்கும் தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது.சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படும். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று, காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக் குடங்கள் எடுத்து வரப்பட்டன. காலையில் காந்தியடிகள் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபாய்க்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வேன் மூலமாக பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மகளிர் குழுவினர், குழந்தைகள் திரளாக பங்கேற்றனர். குழந்தைகள் மற்றும் மாணவியர், தேசப்பற்றை வலியுறுத்தும் விதமாக, வாசகங்கள் அடங்கிய தட்டிகளை கையில் ஏந்தி வந்தனர். பெண்கள்க பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.ஏற்பாடுகளைக மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர், வையாபுரி முதலியார் மற்றும் பலர் செய்திருந்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.