பதிவு செய்த நாள்
09
நவ
2016
12:11
பெரம்பலுார்: கங்கைகொண்டசோழபுரம், பிரகதீஸ்வரர் கோவிலில், வரும் 14ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்றதன் சின்னமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்திபெற்றது, புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, 75 கிலோ எடை உள்ள, 46 மூட்டை என 3,450 கிலோ அரிசியால் சாதம் சமைத்து, காலை, 9:00 மணி முதல் பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை, 6:00 மணியளவில் தீபாராதனை நடைபெறும். லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு, வரும், 14ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு கணக்க விநாயகருக்கு மகாபிஷேகமும், 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. வரும், 14ம் தேதி அன்னாபிஷேகத்திற்கு பின், தீபாராதனை முடிந்து, பக்தர்களுக்கு, லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் இரவு பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள சாதத்தினை ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். மேலும், 15ம் தேதி மூலவருக்கு ருத்ராபிஷேகமும் நடைபெற உள்ளது.