பதிவு செய்த நாள்
10
நவ
2016
10:11
சிவகங்கை: கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே வெளியாகி இருந்த கணிப்பு சரியாக நடந்துள்ளது.
கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் மத்திய அரசு நேற்று முன்தினம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வரும் டிச., 30 வரை மட்டுமே செல்லும் என அறிவித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்துள்ள இத்திட்டத்திற்கு நாட்டின் பொருளாதார நிபுணர்கள், சந்தை வல்லுனர்கள், வங்கியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இக்கருத்தை கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன் அதாவது தமிழ் வருடமான துர்முகி ஆண்டு பிறப்பதற்கு முன்பே அச்சிடப்பட்டு வெளியான ஆற்காடு பஞ்சாங்கத்தில் 12 வது பக்கத்தில் இதற்காக குறிப்புகள் உள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாக்கிய விரையாதிபதியான புதன் இந்த ஆண்டு அர்க்காதிபதியாகவும், சேனாதிபதியாகவும் இருப்பதால் வளர்பிறை காலத்தில் வியாபாரிகள் பொன், தங்கம், வெள்ளி இவைகளால் கடும் பாதிப்பு அடைதல் ஏற்படும். ராஜகோபுரங்களுக்கு இடியாலும், தேனீக்களாலும் அதிக பாதிப்பு ஏற்படும்.வங்கிகளில் புதிய மாற்றம் ஏற்படும். கணக்கில் இல்லாத கறுப்பு பணத்தை கண்டுபிடிக்க நேரும். தணிக்கை துறை மூலம் அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கில் பணம் சேரும்படியான யோகம் உண்டு. அயல் நாட்டில் புதிய கடன் பெற்று மக்களுக்கு பல புதிய திட்டங்களை செயல்படுத்த நேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.