பழநி மலைக்கோயில் ரோப்கார் 35 நாட்களுக்கு பின் இயக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2016 10:11
பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிகள் முடிந்து 35 நாட்களுக்கு பின் சிறப்பு பூஜையுடன் நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயங்குகிறது.பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் எளிதாக பக்தர்கள் செல்லும் வகையில் ரோப்கார், காலை 7 மணி முதல் இரவு 9மணி வரை இயங்குகிறது. மதியம் 1:30 மணி முதல் 2:30மணி வரை நிறுத்தப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக ரோப்கார், கடந்த அக்.,5ல் நிறுத்தப்பட்டு கீழ்தளம், மேல்தளம் கம்பிவடம் மற்றும் மோட்டார், சாப்ட் உள்ளிட்டவை கழற்றி புதுப்பிக்கப்பட்டன. மேல்தளத்தில் புதிதாக சாப்ட் பொருத்தப்பட்டு பராமரிப்புகள் முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 8 பெட்டிகளில் எடை கற்களுடன் சோதனை ஓட்டம் நடந்தது. ரோப்கார் கமிட்டி அனுமதி வழங்கியதையடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கப்பட்டது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், மொத்தம் ரூ.5 லட்சம் செலவில் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பழைய பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் கரூரில் இருந்து புதிதாக பெட்டிகள் வரஉள்ளது, என்றார்.