பதிவு செய்த நாள்
10
நவ
2016
10:11
வால்பாறை: கந்தசஷ்டிவிழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய முருகன் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நான்காமாண்டு கந்தசஷ்டி விழா கடந்த மாதம், 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், கடந்த, 5ம் தேதி சுப்பிரமணிய சுவாமி, அம்மனிடம் பெறப்பட்ட சக்தி வேலுடன், வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், வேலை சூரனை நோக்கி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஸ்டேன்மோர் சந்திப்பில் முதல் சூரனான தாரகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், பின் காந்திசிலை வளாகத்தில் இரண்டாவது சூரனான சிங்கமுகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் மூன்றாவது சூரனான பானுகோபன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், நான்காவது சூரனான சூரபத்மனை, கோவில் வளாகத்தின் முன்பும் வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து கடந்த, 6ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் நேற்று முன் தினம் காலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் தேவியருடன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமலிங்கம், அழகிரி உட்பட பலர் செய்திருந்தனர்.