பதிவு செய்த நாள்
10
நவ
2016
11:11
குறிச்சி: குறிச்சியில், அனைத்து சமூகத்தார் இணைந்து நடத்தும் அரவான் திருவிழா, ஊர் எல்லை கட்டுதலுடன் துவங்கியது. விழா நேற்று முன்தினம் மாலை, குறிச்சி முதுப்பார் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஊர் எல்லை கட்டுதல், அரவானுக்கு உயிர் பிடித்தல், கம்பம் நட்டு பூ சாத்துதல் ஆகியவை, ராமராஜ் தலைமையில், அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் முன்னிலையில் நடந்தன. 14ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 15ம் தேதி இரவு, 8:00 மணிக்கு பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதல் நடக்கிறது. 16ம் தேதி காலை, 6:00 மணிக்கு அரவான் அலங்கரிக்கப்பட்டு உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலிலிருந்து அரவான் எழுந்தருளுதல் நடக்கிறது. 9:00 மணிக்கு, அரவான் குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி சிறப்பு வழிபாட்டுடன் புறப்படுதலும், மாலை, 6:00 மணிக்கு, அரவான் கோவிலில், அரவான், பொங்கியம்மன் திருமண விழாவும் நடக்கின்றன. மறுநாள் (17ம் தேதி) மதியம், 12:30 மணிக்கு அரவான் கோவிலில் நாதஸ்வர கச்சேரியுடன் விழா துவங்குகிறது. இரவு, 8:30 மணிக்கு, குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு சீர்முறை வழிபாடு முடித்து, அரவான் புறப்படுதல் நடக்கிறது. நிறைவு நாளான, 18 காலை. 8:00 மணிக்கு அரவான் திருவீதி உலா புறப்பாடு துவங்குகிறது. இரவு, 11:00 மணிக்கு, குறிச்சி, தேவேந்திர குல வேளாளர் சமூக மேடையில் நடக்கும் களப்பலி நிகழ்ச்சியுடன், விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, குறிச்சி அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் செய்துள்ளனர்.