வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டவிழா விமரிசையாக நடந்தது. இங்குள்ள முத்தாலம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வூரை சுற்றிய கான்சாபுரம், ராமசாமியாபுரம், நெடுங்குளம், கொடிக்குளம் கிராம மக்கள் மழைக்கு அதிபதியான முத்தாலம்மனை விழா எடுத்து வணங்கி அதன்பின் விவசாய பணிகளை துவங்குவார்கள். இதற்காக ஒருவாரம் கலைவிழா கோலாகலமாக நடைபெறும். இறுதிநாளில் தேரோட்டம் நடக்கும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுப்பர். கிராம மக்களின் பல்வேறு ஐதீகங்களை உள்ளடக்கிய இவ்விழா நவ.2 ல் துவங்கியது.
நேர்த்திக்கடன்: ஒவ்வொரு நாளும் பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு என கலைவிழாக்கள் நடந்தது. இறுதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அம்மன் தேரில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் மாவிளக்கு எடுத்து , ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்களை துாவி வழிபாடு: மாலையில் மஞ்சள் நீராட்டு , அருள்வாக்கு கூறுதல் நடந்தது. இறுதியாக அம்மன் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மனை கண்மாயில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றனர். அப்போதுஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன் திரண்டு பூக்களை துாவி வழிபட்டு வழியனுப்பி வைத்தனர்.