பதிவு செய்த நாள்
10
நவ
2016
11:11
மானாமதுரை, கார்த்திகை திருநாளுக்காக மானாமதுரையில் விதவிதமான அகல் விளக்குகள் ஒளிர தயாராகி வருகின்றன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. சீசனுக்கு ஏற்றவாறு பல்வேறு மண்பாண்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம். வரும் டிசம்பர் 12ம் தேதி கார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கார்த்திகை திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படும். மூன்று நாட்களும் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்காக மானாமதுரையில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
சாதாரண சிறிய அகல் விளக்கு முதல் அடுக்கு விளக்கு வரை இங்கு தயாரிக்கப்படுகின்றன. கார்த்திகை திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே விளக்குகள் விற்பனைக்கு அனுப்ப தொழிலாளர்கள் தொடங்குவார்கள். இந்தாண்டு ஏராளமான டிசைன்களில் விளக்குகள் தயாராகியுள்ளன. கிளியான் சட்டி,வெற்றிலை விளக்கு,தேங்காய் விளக்கு,மாட விளக்கு, நீரும் நெருப்பும் விளக்கு, ஐயப்பன் விளக்கு,குபேர விளக்கு, விநாயகர் விளக்கு, சர விளக்கு உள்ளிட்ட பல்வேறு விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. 65 பைசா முதல் 500 ரூபாய் வரை விளக்குகளின் டிசைன் வேலைப்பாடுகளுக்கு தகுந்தவாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை, திண்டுக்கல், காரைக்குடி, தேவகோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து விளக்குகளுக்கு வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர்கள் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தயாரிப்பாளர் ரங்கசாமி கூறுகையில்: கிளியான் சட்டி எனப்படும் சிறிய விளக்கு நாள் ஒன்றுக்கு 150 முதல் 250 வரை தயாரிக்கப்படும்.சர விளக்கு,தேங்காய் மூடி விளக்குகளுக்கு வேலைகள் அதிகம்.இருவர் இணைந்து விளக்கு தயாரிக்க வேண்டும். இதனால் குறைந்த அளவு தான் தயாரிக்கிறோம்.கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விளக்கு தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது, என்றார்.