பதிவு செய்த நாள்
10
நவ
2016
11:11
கோவை: சாலை விரிவாக்க பணியின்போது, ஈச்சனாரி கோவிலை இடிக்காமல் மாற்று ஏற்பாடு செய்யப்படும், என, மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். பா.ஜ., மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் சார்பில், கோவை, காந்திபுரம், நுாறடி ரோட்டில் மக்கள் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், படித்த இளைஞர்களுக்கு பதிவு செய்து, தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேவை மைய இணையதளத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: சபரிமலைக்கு பெண்கள் செல்ல கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. வழிபாட்டு விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். சில வழிபாட்டு தலங்களில் சில நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
இது, குறிப்பிட்ட சாராருக்கு எதிரானதல்ல; எல்லா தரப்பு மக்களுக்கும் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த வழிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளை மீறுவதென்றால் அப்பகுதி மக்கள், குறிப்பாக பெண்களிடம் கருத்து கேட்க வேண்டும். அரசு முடிவு எடுப்பது என்பது பொருந்தாத ஒன்றாகும். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது விரும்பத்தகாத ஒன்று. விவசாயிகள் வாழ்ந்தால் தான் மற்றவர்கள் வாழமுடியும். மத்திய அரசு விவசாயிகள் முன்னேற்றத்துக்கு கவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு விவசாயிகள் கடனுக்கு, ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்கும் நிதிகளை, மாநில அரசுகள் தான் முறையாக பெற்று பயனாளிகளுக்கு அளிக்க வேண்டும். சாலை விரிவாக்க பணிக்காக கோவை ஈச்சனாரி கோவில் இடிக்கப்படாமல், மாற்று ஏற்பாடு செய்யப்படும். கோவை சசிகுமார் கொலை வழக்கில் பிற மாநிலங்கள், வெளிநாட்டு தொடர்புகள் இருக்கலாம். இதன் தொடர்ச்சியாக தான், கோவை, கேரளா பகுதிகளில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தொடர்பாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ., மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.