பதிவு செய்த நாள்
10
நவ
2016
11:11
பழநி, திண்டுக்கல்லை பசுமையாக்கும் நோக்கத்தில், திண்டி மா வனம் இயக்கம் சார்பில் பழநி மலையில் தலவிருட்சம், மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை பசுமையாக்கும் நோக்கத்தில் திண்டிமா வனம் இயக்கம் சார்பில் தொண்டுநிறுவனங்கள், கல்லுாரிகள், மாணவர்கள் கைகோர்த்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்த தன்னிகரில்லா பசுமைப்பணியில் தினமலர் நாளிதழும் திண்டி மாவ வனம் அமைப்போடு கைகோர்த்து களமிறங்கியுள்ளது. அதன்படி நேற்று பழநி மலைக்கோயில் வின்ச் ஸ்டேஷன் பகுதியில் 300 அரியவகை மூலிகைச்செடிகள், தலவிருட்ச மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா மரக்கன்றுகளை நட்டனர். திருப்பூர் தொண்டு நிறுவனம் தொழிலதிபர் கணேஷ்பாபு, சென்னை செல்வகுமார் சுவாமிகள், சிதம்பரம், திண்டி மா வனம் உறுப்பினர் லட்சுமணபிரசாத், திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., கல்லுாரி பேராசிரியர் ராஜாராம், பழநி தண்டாயுதபாணி அன்னதானக்குழு ராதாகிருஷ்ணன், பழநியாண்டவர் பாலிக்டெக்கனிக் மூலிகைபயிற்சி ஆசிரியர் செல்வராஜ் மற்றும் கோயில் நாதஸ்சுர பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இணை ஆணையர் ராஜமாணிக்கம்: பழநி மலையை பசுமையாக்க ஏற்கனவே கிரிவீதிகள், வின்ச், ரோப்கார் உள்ளிட்ட பகுதிகளில் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் வைத்து பராமரித்து வருகிறோம். கோயில் சிறுவர் பூங்காவில் மூலிகை பண்ணை உள்ளது. தற்போது கூடுதலாக மலையை சுற்றி மூலிகை செடிகள், தலவிருட்சங்கள் நடப்படுகிறது.
திருப்பூர் கணேஷ்பாபு: பழநி மலையில் துளசி, வில்வம், நிலவேம்பு, சந்தனம், துனுக்கு பச்சஇலை, வேம்பு, மண்சரிவை தடுக்கும் வேட்டி வேர் என தற்போது 300 மூலிகைச் செடிகள் நட்டுள்ளோம். தொடர்ந்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் வரை நட திட்டமிட்டுள்ளோம். பழநியாண்டவர் பூஜைக்கு பயன்படும் வகையில் நந்தியவட்டம்,சென்பக பூச்செடிகள் நட உள்ளோம். வின்ச், கிரிவீதிகள், யானைப்பாதை, படிப்பாதை வழிகளில் அடுத்து வரும் ஞாயிறு அன்று மரக்கன்றுகளை நட உள்ளோம். பயிற்சி ஆசிரியர் செல்வராஜ்: பழநிமலையில் உள்ள மூலிகைச்செடிகள் குறித்து 50பேர் கொண்ட குழுவினர் கணக்கெடுத்து வருகிறோம். அதில் அசோக மரம், சித்திரமூலம், பால் பருக்கன், மூக்குத்தி பூ என 270 மூலிகை தாவரங்கள் மலையில் இருக்கிறது. திண்டிமா வனம் இயக்கத்தின் பசுமை புரட்சியில் நாங்களும் இணைந்து பங்களிப்பை வழங்குகிறோம்.
தினமலர் உதவி: சுரேஷ்பாபு (தலைமையாசிரியர்): இயற்கை வளத்தை பாதுகாப்பதும், முந்தைய வளத்தை மீட்பதும் மிகப்பெரிய சவால். இப்பள்ளியில் மரங்கள் வளர்ப்பிற்கு இணையாக, மழைநீர் சேகரிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாட்டுப்பற்று மிக்க பணிகள் மூலம் தினமலர் நாளிதழின் பங்கேற்பும், ஊக்குவிப்பும் இதற்கு அடித்தளம் என்பதை மறுக்க முடியாது, என்றார். ஜி.நாராயணசாமி (பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்): மழைப் பொழிவுக்கு, மரங்கள் அவசியம் அறிந்தபோதும் அதனை வளர்க்க முன்வருவோர் மிகக்குறைவு. இதுபோன்ற சூழலில் திண்டி மா வனம் அமைப்பின் முயற்சியும், கைகோர்த்துள்ள தினமலரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. இதனை பயன்படுத்தி பசுமை சூழ்ந்த பகுதியாக உருவாக்க உறுதி எடுத்துள்ளோம். பாலாஜி (சமூக ஆர்வலர்): மழை வளம் பெருக்கும் வகையில் திண்டி மா வனம் அமைப்பின் அரிய முயற்சி திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளிலும் வியாபிக்கத் துவங்கியுள்ளது. தினமலர் நாளிதழ் மூலம் சமீபகாலமாக திண்டி மா வனம் அமைப்பின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடிந்தது. பள்ளி, கிராமம், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு புத்துணர்வு கிடைத்துள்ளது.