மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் நன்கொடை வசூலிப்பதில் மோதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2016 12:11
திருப்புவனம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக நன்கொடை வசூலிப்பது தொடர்பாக இணை கமிஷனர் முன் உதவி ஆணையர் ரோசாலின் சமதா மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர் மோதி கொண்டனர். திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு பல ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வருகின்றன.காளியை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் செல்கின்றனர். மடப்புரம் கோவிலில் உதவி ஆணையராக ரோசாலின் சமதா நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். கோவிலில் தீபம் ஏற்றவும், மஞ்சள் கயிறு கட்டவும் தடை விதித்ததுடன், நாகர் சிலைகளையும் அகற்றி விட்டார். கோவில் கும்பாபிஷேகம் நடத்த நன்கொடை வசூல் செய்ய,கட்டுமான பணிகளை மேற்கொள்ள அறங்காவலர் குழுவிடம் எந்த ஆலோசனையும் செய்வதில்லை என்ற புகார் உள்ளது.
இது தொடர்பாக ரோசாலின் சமதாவிற்கும் அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கருக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் இருந்து வந்துள்ளது. கோவிலுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய ஆடு, கோழிகளை சேகரிக்க டெண்டர் விடாமல் தன்னிச்சையாக தனிநபர் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து விசாரிப்பதற்காக இணை கமிஷனர் செந்தில்வேலவன் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர் உதவி ஆணையர் பற்றி புகார் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த உதவி ஆணையர், ஜெய்சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உதவி ஆணையருக்கு ஆதரவாக அஸ்வின் என்பவர் கோவில் வளாகத்திலேயே ஜெய்சங்கரை தாக்க முயன்றுள்ளார். அதிருப்தியடைந்த இணை கமிஷனர் கோயிலை விட்டு வெளியேறி விட்டார். அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கரிடம் கேட்ட போது: உதவி ஆணையர் கோவில் திருப்பணிகளில் தன்னிச்சையாக செயல்படுகிறார். கோவில் வாகனத்திற்கு டிரைவர் உள்ள நிலையில் அவர்களுக்கு மாற்று பணி வழங்கி விட்டு அஸ்வின் என்ற நபரை தன்னிச்சையாக பணியில் அமர்த்தியதுடன் கோவில் பணிகளில் அஸ்வின் தலையிட்டு பிரச்னை செய்கிறார். இதுகுறித்து இணை கமிஷனரிடம் புகார் செய்த போது அஸ்வின் என்னை தாக்க முயற்சித்தார், என்றார்.
உதவி ஆணையரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை. இணை கமிஷனர் செந்தில்வேலனிடம் கேட்ட போது: கோவிலுக்கு எனது நண்பரை தரிசனம் செய்ய அழைத்து வந்தேன். இது குறித்து எதுவும் தெரியாது, அறங்காவலர் குழு தலைவர் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். மடப்புரம் கோவிலில் உதவி ஆணையரின் தன்னிச்சையான போக்கால் பக்தர்கள் பல நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இணை கமிஷனர் முன்னிலையில் மோதல் எழுந்ததையடுத்து இதற்கு பின்னராவது தீர்வு கிடைக்குமா என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.