பதிவு செய்த நாள்
10
நவ
2016
01:11
மதுரை: சமூக வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் ஏழூர் அம்மன் சப்பரம் பவனி கோலாகலமாக நடைபெற்றது.
ஏழூர் அம்மன் திருவிழா நவ.,8ல் துவங்கியது.டி.கல்லுப்பட்டி பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் பஞ்சம் ஏற்பட்டது. ஆந்திராவிலிருந்து ஒரு மூதாட்டி தனது 6 பெண் குழந்தைகளை காவடியில் சுமந்தவாறு, டி.கல்லுப்பட்டி வந்தார். கிராம தலைவராக இருந்த ராவ் (ராயர்) வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு உபசரித்து, அடைக்கலம் அளித்தனர். அப்பகுதியில் மழை பெய்து வறுமை, நோய்கள் நீங்கின.
ஒருநாள் மூதாட்டி, எங்களுக்கு அசைவ உணவு வேண்டும், என்றார். ராவ், நாங்கள் சைவம் சாப்பிடுபவர்கள், எனக்கூறி அதே ஊரின் மற்றொரு தலைவராக இருந்த நாயக்கர் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கு வரகு அரிசி சோறு, ஆட்டுக்குடல் குழம்புடன் உபசரித்தனர். அதே வீட்டில் மூதாட்டி குழந்தைகளுடன் வசித்தார். பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்ததும், வரன் தேட நாயக்கர் ஏற்பாடு செய்தார்.மூதாட்டி மற்றும் அவரது பெண் குழந்தைகள், நாங்கள் தெய்வீக பிறவிகள். பூலோகத்தில் எங்கள் கடமை முடிந்ததால் புறப்படுகிறோம். நாங்கள் ஜோதியில் கலந்தபின், எங்கள் சாம்பலை அருகிலுள்ள கிராமங்களில் துாவுங்கள். ஏழு ஊர்களில் ஆதிபராசக்தியின் வடிவமாக புகுவோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டில் பிறப்போம். மக்களின் குறைகளை தீர்ப்போம், எனக்கூறி ஜோதியில் கலந்ததாக (தீக்குளித்ததாக) ஐதீகம்.
இதன் நினைவாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி பவுர்ணமியின்போது டி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவை ஏழு கிராம மக்கள் இணைந்து ஏழூர் அம்மன் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.இந்த அம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, டி.கல்லுப்பட்டி- சரஸ்வதி, வன்னிவேலம்பட்டி-மகாலட்சுமி, வை.அம்மாபட்டி- பைரவி, காடனேரி-திரிபுரசுந்தரி, கிளாங்குளம்-சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர். விழாவை முன்னிட்டு சப்பரங்களை காலை தலைச்சுமையாக பல கிலோ மீட்டர் துாரம் சுமந்து, அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். அங்கு பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட ஏழு அம்மன்களும் தோன்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், திரளான பக்தர்கள் மத்தியில் சப்பரம் பவனி வந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.