பதிவு செய்த நாள்
22
நவ
2016
02:11
வந்தவாசி: வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் அப்பாண்டைராசன், 75. இவரது மனைவி ராஜேஸ்வரி, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், மோட்சம் அடைவதற்காக, சல்லேகனை விரதத்தை வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அருகில் உள்ள விசாகாச்சாரியார் தபோ நிலையத்தில், நேற்று முன்தினம் இவர் துவங்கினார். இதுகுறித்து அவரின் உறவினர்கள் கூறியதாவது: ஆசை, பற்று, உறவு ஆகியவற்றை துறந்து, அப்பாண்டைராசன் சல்லேகனை விரதம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அவர் திட ஆகாரத்தை தவிர்த்து, தற்போது திரவ ஆகாரம் மட்டுமே எடுத்துக் கொள்கிறார். சில நாள்கள் கழித்து, திட, திரவ ஆகாரம் எதுவும் உண்ணாமல் கடும் விரதம் மேற்கொள்வார். இவர் மோட்சம் அடைந்ததும், இவரது உடல் தேங்காய்கள் மூலம் எரியூட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.