பதிவு செய்த நாள்
10
அக்
2011
10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா, 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதற்கான, பந்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பந்தக்காலுக்கு, சம்பந்த விநாயகர் சன்னிதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், மேளதாளம் முழங்க பந்தக்கால், கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு, அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நடப்பட்டது. அப்போது, பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் கோஷமிட்டனர்.பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராதி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா, வரும் நவம்பர் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 10ம் நாள் டிசம்பர் 8ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.