பதிவு செய்த நாள்
03
டிச
2016
11:12
மதுரை: கோயில்களில் 20 ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்துறையால் நிர்வகிக்கப்படும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களின் ஆண்டு வருவாய் கணக்கிடப்படுகிறது. இதன்படி, 10 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் வருவாய் உள்ள கோயில்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஒரு லட்சம் ரூபாய் வருவாய்க்கு உட்பட்ட கோயில்களை உதவி கமிஷனர், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள கோயில்களை இணை கமிஷனர் நிர்வகிப்பர். வளர்ச்சி திட்டங்களுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ரூ.20 கட்டணம் ரத்து: சபரிமலை காலம், மார்கழி, தை மாதங்களில் கோயில்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சுலப தரிசனத்திற்காக 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 20 ரூபாய் கட்டண தரிசனத்தை, பரிசோதனை அடிப்படையில் ரத்து செய்ய அறநிலையத்துறை முடிவு எடுத்துள்ளது. முதற்கட்டமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கட்டணத்திற்கு எதிர்ப்பு: விஸ்வ இந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர் எம்.சந்திரசேகரன் கூறியதாவது: கோயில்களை நிர்வகிக்கும் உரிமையை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். கடவுளை தரிசனம் செய்ய காசு எதற்கு. எனவே அனைத்து கட்டண தரிசனத்தையும் ரத்து செய்ய வேண்டும். கோயில் உண்டியல் வருவாய் மூலம் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம் என்றார்.