கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஜன., 10ல் நடக்கிறது. இக் கோயிலில், பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.,3ல் சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. 10ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் திருமேனியில் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படி களைதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மரகத நடராஜருக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனைக்கு பின் சந்தனாதி தைலம் பூசப்படுகிறது. இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளல் நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு அருணோதய நேரத்தில் நடராஜர் திருமேனி மீது சந்தனக்காப்பிடுதல் நடக்கிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.