பதிவு செய்த நாள்
14
டிச
2016
11:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று தீர்த்த உற்சவம் நடந்தது. கோயிலில் டிச.,4ல் துவங்கிய திருவிழாவில், தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தனர். நேற்றுமுன்தினம் மலைமேல் மகா தீபம் ஏற்றப்பட்டது.தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, நேற்று உற்சவர் சன்னதியில் விநாயகர், சுவாமி, தெய்வானை அம்மன், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், அஸ்திரதேவர் எழுந்தருளினர். கார்த்திகை கொடியேற்றம் தொடங்கி நேற்று காலை வரை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், உற்சவர்களுக்கு அபிஷேகம் நடந்தது.இதைதொடர்ந்து, சுவாமிகளுக்கு புஷ்ப அலங்காரமாகி தீபாராதனைகள் நடந்தன. உச்சிகால பூஜை முடிந்து, சுவாமி, அம்மன் சரவணப் பொய்கையில் எழுந்தருளினர். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதியில் யாகம் வளர்க்கப்பட்டு, பூஜைகள் முடிந்து அஸ்தரதேவருக்கு சரவணப்பொய்கையில் தீர்த்த உற்சவம் நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி அருள்பாலித்தார்.