பதிவு செய்த நாள்
14
டிச
2016
11:12
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக தேதி மாற்றம் குறித்து வெளியான தகவலுக்கு, கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதியில் நடக்கும் என, கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. முக்கிய சன்னிதி மற்றும் கோவில் வெளிப்புற தரை தளம் உட்பட அனைத்து இடங்களிலும், மும்முரமாக வேலைகள் நடக்கின்றன. இந்த பணி, அடுத்த மாதம் முடிந்து விடும் என, கூறப்படுகிறது. இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றில், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக தேதி மாற்றம் குறித்து, செய்தி வெளியிட்டது. இதை கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.
இது குறித்து, காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீகாரியம் விஸ்வநாதன் சாஸ்திரி கூறியதாவது: கோவில் திருப்பணி வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து, குறிப்பிட்ட படி, பிப்., 1ல், கும்பாபிஷேகம் நடக்கும். இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. தேதி மாற்றுவதாக இருந்தால், பத்திரிகை வாயிலாக தகவல் கொடுப்போம். கும்பாபிஷேகத்திற்கான தேதி மாற்றம் குறித்து, யாரிடமும் நாங்கள் தகவல் தெரிவிக்கவில்லை; வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.