பதிவு செய்த நாள்
29
டிச
2016
11:12
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், மார்கழி மாதத்தில், பகல் பத்து, ராப்பத்து என, 20 நாட்களும் திவ்யபிரபந்தம் அபிநயத்துடன் வாசிக்கப்படும். இதன்படி, நேற்று இரவு, 7:00 மணிக்கு, மூலவர் அனுமதி பெறும், திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன், வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவங்கியது. இதையடுத்து, இன்று பகல்பத்து உற்சவம் துவங்குகிறது. பகல் பத்து உற்சவத்தின் போது, நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில், அர்ச்சுண மண்டபத்தில் எழுந்தருள்வார். உற்சவத்தின், 10ம் நாளான, ஜன., 7ல், நம்பெருமாள், மோகினி அவதாரத்தில் எழுந்தருள்வார். ஜன., 8 ஏகாதசி உற்சவத்தின் போது, அதிகாலை, 5:00 மணிக்கு, நம்பெருமாள் ரத்தின அங்கியுடன், சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.