பதிவு செய்த நாள்
29
டிச
2016
01:12
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நேற்று துவங்கியது; பகல் பத்து உற்சவம், இன்று துவங்குகிறது. திருப்பூர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, நேற்று துவங்கியது. நேற்றிரவு, 7:00 மணிக்கு, திருநெடுந்தாண்டகம் பாசுரம் பாடப்பட்டது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், ஆழ்வார்களின், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், பகல் பத்து மற்றும் ராப்பத்து என, 20 நாட்கள் பாடப்படுகிறது. இன்று காலை, 10:00 மணிக்கு, திருமொழி திருநாளான, பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. தினமும் பாசுரங்கள் பாடப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி, வரும், ஜன.,8ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீ வீரராகவ பெருமாளுக்கு, திருமஞ்சனம் நடக்கிறது. காலை, 5:30 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு, கருட சேவை, திருவீதியுலா நடைபெறவுள்ளது. அன்றிரவு, 8:00 மணிக்கு, திருவாய்மொதி திருநாளான, ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. 17ம் தேதி, ஆழ்வார் மோட்ஷம்; 11ம் தேதி, கூடாரை வெல்லும் சீர் உற்சவம்; மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாணம் ஆகியவை நடக்கிறது.
ஆருத்ரா தரிசனம்: ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, வரும் ஜன.,2ம் தேதி துவங்குகிறது. அன்றிரவு, 7:00 மணிக்கு, மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம் துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. 10ம் தேதி இரவு, சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா, 11ம் தேதி நடை பெறுகிறது. அன்று அதிகாலை, 3:30 மணிக்கு மகா அபிஷேகம், 6:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை, ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனமர் நடராஜர் பட்டி சுற்றுதல், திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.