மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: கடும் குளிரிலும் குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2016 04:12
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை
ஊஞ்சல் உற்சவத்தில் கடும் குளிரிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று
இரவு அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று
காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு
11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில்
ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கற்பூரதீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து
ஆடினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும்,
தாலாட்டு பாடல்களையும் பாடினர். இந்து சமய உதவி ஆணையர்கள் மேல்மலையனூர்
பிரகாஷ், திருவண்ணாமலை மோகன் அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, மற்றும்
அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி டி. எஸ்.பி.,
ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். மார்கழி
மாதப்பணியினால் கடும் குளிர் நிலவிய போதும் வழக்கமான அளவில் பக்தர்கள்
குவிந்திருந்தனர்.