ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமத்ஜெயந்தி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2016 04:12
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் கடந்த 3 நாட்களாக நடந்த அனுமத் ஜெயந்தி விழா கோலாகலமாக நிறைவடைந்தது. வத்திராயிருப்பில் உள்ள ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் மாத்வப்பந்து முறையிலான அனுமத்ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முதல் நாள் ஒதுக்குவிரதம் கடைபிடிக்கப்பட்டு கோயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு புஷ்ப அலங்காரமும், மூலவருக்கு வடைமாலை அலங்காரமும் நடந்தது. இறுதிநாளில் ஆஞ்சநேயருக்கு ஜெயமாருதி பக்த சபாவின் சார்பில் பஜனை வழிபாடும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. பக்தசபா நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். வத்திராயிருப்பு நடுஅக்கிரஹாரம் சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் சேவா சமிதி டிரஸ்ட் சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் ஆஞ்சநேய ஜெயந்தி வழிபாடு நடந்தது. அதிகாலையில் சுவாமிக்கு 18 வகை அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. பின்னர் சுவாமி ராஜஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு திவ்யநாம வழிபாடும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. டிரஸ்ட் செயலாளர் நாராயணன், பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.