பதிவு செய்த நாள்
31
டிச
2016
02:12
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் அய்யப்ப சாமி கோவில், அய்யப்ப சேவா நிறுவனம் சார்பில், ஆண்டு தோறும் மண்டல மகர பூஜை விழா நடக்கிறது. இங்கு சபரிமலையில் உள்ளது போல், அபிஷேகம், அலங்காரம், படி பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை ஆகம விதிப்படி நடக்கிறது. இதையொட்டி நடக்கும் திருவிளக்கு ஊர்வலம், மாநகரில் மிகவும் பிரசித்தம். டிச.,30 முன்தினம் இரவு ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், காமாட்சி விளக்கை ஏற்றி, கைகளில் ஏந்தி, சரண கோஷம் முழங்க சென்றனர். ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலத்தில், புலி வாகனத்தில் அய்யப்ப சுவாமி எழுந்தருளி, சேவை சாதித்தார். வழி நெடுகிலும் வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். செண்டை மேளம் முழங்க, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி., ரோடு, காவிரிரோடு, கருங்கல்பாளையம், வழியாக அய்யப்பன் கோவிலில் நிறைவடைந்தது.