பதிவு செய்த நாள்
17
அக்
2011
11:10
பழநி : பழநி மலையின் யானைப்பாதை வழித்தடத்தில், நிலச்சரிவு காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு, படிப்பாதை உள்ளபோதும், இலகுவான யானைப்பாதை வழித்தடத்தையே, பெரும்பாலான பக்தர்கள் தேர்வு செய்து, மலைக்கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, பழநியில் கனமழை நீடித்தது. மலைக்கோவிலின் மேல்தளத்தில், சேகரமான அதிக அளவு மழைநீர், கூடுதல் வேகத்துடன் யானைப்பாதையைக் கடந்து சென்றது. முறையான வடிகால் வசதி செய்யப்படாததால், கூடுதல் நீர் வள்ளி சுனை அருகே, 56வது மண்டபப் பகுதியில், சிமென்ட் தள பாதையில், மண் அரிப்பை ஏற்படுத்தியது. இதனால், மண் சரிவு ஏற்பட்டது.
இவ்வழியே, பக்தர்கள் நடந்து செல்ல முடியாத வகையில், பாதை சேதமடைந்தது. இதையடுத்து, பக்தர்கள் செல்ல நேற்று காலை முதலே, கோவில் நிர்வாகம் தடை விதித்தது. யானைப் பாதை நுழைவாயில், கம்பி தடுப்புகள் மூலம் மூடப்பட்டுள்ளது. பாதையைச் சரிசெய்யும் பணி, உடனடியாக துவக்கப்பட்டது.
கோவில் இணை கமிஷனர் ராஜா கூறுகையில், "சீரமைப்புப் பணிகள் மாலையில் முடிந்துவிடும். உடனடியாக, பக்தர்கள் அனுதிக்கப்படுவர் என்றார்.