பதிவு செய்த நாள்
18
அக்
2011
11:10
குற்றாலம் : குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு சித்ரசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய்மொழியம்மை கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிலஞ்சி குமாரர், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருதல் நடந்தது. விழாவின் ஐந்தாம் நாளன்று காலையில் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விழாவின் எட்டாம் நாளான நேற்று காலையில் திருவிலஞ்சி குமாரர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளல், சித்ரசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, வெள்ளி சப்பரத்தில் எழுந்தளுல் நடந்தது. தாண்டவ இசைக்கேற்ப நடந்த தாண்டவ தீபாராதனையை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். இரவு திருவிலஞ்சி குமாரர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளல், பிட்சாசன மூர்த்தி எழுந்தருளல், அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளல் நடந்தது. விழாவின் இறுதி நாளான நாளை (18ம் தேதி) காலையில் திருவிலஞ்சி குமாரர் பிரியா விடையும், விசு தீத்தவாரியும், ரிஷப வாகன காட்சியும், மாலையில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.