பதிவு செய்த நாள்
03
பிப்
2017
12:02
பெரம்பலுார், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ராஜேந்திரசோழன், 1019-ல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன், காரணமாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டம் பெற்றார். அதன் நினைவாக, கி.பி.,1023-ல் அரியலுார் மாவட்டத்தில், கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கி, அதில் பிரகதீஸ்வரர் கோவிலை நிறுவினான். பெண்ணின் நலினத்தை போல இக்கோவிலின் விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த கோவிலில்,1932ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து, 85 ஆண்டுகளுக்கு பின், நேற்று பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 6ல் உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேசம் கங்கை நதியிலிருந்து, 108 குடங்களில் புனிதநீர் எடுத்து வந்தனர். தஞ்சை மாவட்டம், திருலோகி எனும் இடத்தில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் குறிப்புகள் கொண்ட இடத்தில் வைக்கப்பட்டு, பின் கடந்த 27ம் தேதி வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், ஆதினகர்த்தர் ஆகியோர் புடைசூழ யானை மீது புனிதநீர் வைக்கப்பட்டு ஊர்வலமாக கங்கைகொண்டசோழபுரத்திற்கு வந்தடைந்தது. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற, எட்டு 8 கால பூஜைகள் நடைபெற்றன.. இதில் 85 சிவாச்சாரியர்கள், 20 வேதவிற்பன்னர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வேதங்களையும், பண்ணிதிருமுறைகளையும் பாடி யாகபூஜைகள் செய்தனர். இந்நிலையில், நேற்று காலை கோபூஜை செய்யப்பட்டு, 8.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்தது. இதனையடுத்து, 9.30 மணியளவில் மூலவர், துர்க்கையம்மன், பிரகன்நாயகி ஆலயங்களின் கோபுரங்களில் வைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றினர். இதனையடுத்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.