பதிவு செய்த நாள்
06
பிப்
2017
01:02
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, போதமலை கள்ளவலி கருப்பனார் கோவிலில், 2,000 பேருக்கு கிடா வெட்டி சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த போதமலை தொடர்ச்சியில், பிரசித்தி பெற்ற கள்ளவலி கருப்பனார் கோவில் உள்ளது. மழைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில், ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும். மழைவாழ் குடும்பத்தினர்தான் பூசாரியாகவும் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், கிடா வெட்டி சமபந்தி விருந்து வைக்கப்படும். இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணியளவில், சமபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையின் முடிவில், 20 ஆடுகள், 20 பன்றிகள், 40 சேவல்கள் அறுத்து முப்பூஜைகள் செய்யப்பட்டன. கடந்தாண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், கால்நடைகளை பலியிட காணிக்கையாக கொடுத்தனர். தொடர்ந்து, பசிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையல் நடந்தது. இதில், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டு சென்றனர்.