பதிவு செய்த நாள்
10
பிப்
2017
02:02
அன்னுார்: கணுவக்கரை மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கணுவக்கரையில், மாகாளி அம்மன், சக்தி கணபதி, பால முருகன், கருப்பண்ணசாமி, சப்த கன்னியர் கோவில் உள்ளது. இங்குள்ள பாலமுருகன் சன்னதி பிரசித்தி பெற்றது. இங்கு கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டன.இதையடுத்து கும்பாபிஷேக விழா பிப்., 7ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. கோவிலுக்கு ஊர்வலமாக முளைப்பாரிஎடுத்து வருதல், யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தன. 8ம் தேதி மண்டபார்ச்சனை, ஸ்துபி வைத்தல், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது.நேற்று காலை வேள்வி சாலையிலிருந்து, கோவிலுக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டு, காலை, 9:45 மணிக்கு, அம்மன், கணபதி, கருப்பண்ணசாமி, சப்த கன்னியர் என, அனைத்து மூலவர்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.அவிநாசி, வாகீசர் மடத்தின் காமாட்சிதாச சாமிகள் அருளுரை வழங்கினார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.