அன்னுார் :சாளையூரில், நுாற்றாண்டுகள் பழமையான பழனி ஆண்டவர் கோவில் தைப்பூசத் திருவிழா நடந்தது.சாளையூரில், சித்தர்கள் வழிபட்ட, நுாற்றாண்டுகள் பழமையான பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. சிறிய குன்றின்மேல் அமைந்துள்ள இக்கோவிலில் வற்றாத சுனை உள்ளது. இங்கு தைப்பூசத்திருவிழா 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் பேச்சாளர், தேச மங்கையற்கரசி, முருகனின் பெருமை என்னும் தலைப்பில் பேசினார். தைப்பூசத்தை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், அபிஷேக பூஜை நடந்தது. நல்லிசெட்டி பாளையம், செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடந்தது. மதியம் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பக்தர்கள் காவடி ஏந்தி பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சன்னதியில் காவடிகளை சமர்ப்பித்தனர். அலங்கார பூஜை நடந்தது. பாரம்பரிய அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.