ராமேஸ்வரம்: சர்வோதய மேளாவையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மேளா குழுவினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தியின் அஸ்தியை 1949ம் ஆண்டு பிப்.,12ல் நாடு முழுவதும் புனித தீர்த்தங்களான கடல், ஆறுகளில் கரைத்தனர். இந்த நாள் சர்வோதய மேளாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நேற்று 69வது சர்வோதய மேளாவையொட்டி, ராமேஸ்வரத்தில் மேளா குழுவினர் காந்தி உருவ படத்தை கோயில் ரதவீதியில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.பின், அக்னி தீர்த்த கடலில் காந்தியின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில், சர்வ சமய பிரார்த்தனை கூட்டம் நடந்தது.