பதிவு செய்த நாள்
14
பிப்
2017
10:02
கோவை : கோனியம்மனுக்கு, 21.5 லட்சம் ரூபாய் செலவில், புதியதேர் உருவாக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. கோவையின் காவல் தெய்வமாக விளங்கும், கோனியம்மன் கோவிலின் தேர், பழுதடைந்தது. புதிய தேர் செய்வதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கின. புதிய தேர் அமைப்பதற்கான 21.5 லட்சம் ரூபாயை, கீர்த்திலால் நிறுவனம், மகாகணபதி ஜூவல்லர்ஸ், பிந்துபாலு ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். தேர் செய்யும் பணி ராஜவீதி, தேர்நிலைத்திடலில் நடந்தது. 42 அடி உயரத்தில் தேர் செய்யப்பட்டது. அதற்கு, 5.5 அடி உயரத்தில் சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேரில், 242 சிற்பங்களும், 220 உருவ பொம்மைகளும், தேரின் முன்பக்கம் இரு குதிரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. புதிய தேருக்கான பிரதிஷ்டை பூஜைகளும், தேர்த்திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் பூஜைகளும் ராஜவீதி தேர்நிலைத்திடலில் நேற்று காலை நடந்தன. புதிய தேருக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. தேரின் முன் யாகசாலை பூஜைகள் நடந்தன. பூஜிக்கப்பட்ட கும்பம், புதிய தேரில் வைக்கப்பட்டது.
பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார், காமாட்சிபுரம் சாக்தசிவலிங்கேஸ்வர சுவாமிகள், பெரியகடைவீதி மாகாளியம்மன் கோவில் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பருதி, கோவில் செயல் அலுவலர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர் வெள்ளோட்டத்தின் போது, போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்கள் நகரின் முக்கிய வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன. மார்ச் முதல் தேதி, கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.