பதிவு செய்த நாள்
14
பிப்
2017
11:02
திருப்பூர் : திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளியில், பிரசித்தி பெற்ற கதித்த மலை வெற்றி வேலாயுதசாமி கோவில் உள்ளது. கதித்தாசலபதி முருகப் பெருமான், தனது வேலால் ஊன்றப்பட்டு எழுந்த தீர்த்தம் உடைய கோவில். இங்கு, தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த, 1ல், துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு, கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி, மலை மேள்ள தேரில் எழுந்தருளினார். காலை, 10:00 மணிக்கு, வெற்றி வேலனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷங்களுக்கு மத்தியில், திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மலை மீது, ஆயிரக்கக்கான மக்கள் வெள்ளத்தில், மலர் அலங்காரத்தில், வெற்றி வேடன் எழுந்தருளி அருள்பாலித்தார். பசுமை சூழ்ந்த மலை மீது, அசைந்தாடி உலா வந்த தேர், 12:00 மணிக்கு, நிலை அடைந்தது.நேற்றிரவு, 8:00 மணிக்கு மகா தரிசனம்; அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து, வள்ளி, தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கதித்தமலையில் மட்டும், தேரோட்டம் மலையிலேயே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இன்று, மஞ்சள் நீராட்டு விழாவுடன், தைப்பூச தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.