ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் வரும் பக்தர்களின் வசதிக்காக மத்திய அரசு நிதி உதவியுடன் வாங்கப்பட்ட பேட்டரி கார்கள் பராமரிப்பின்றி முடங்கி கிடக்கிறது. இதனால் அரசு நிதி 25 லட்சம் ரூபாய் வீணாகிவருகிறது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில்கொண்டு சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்காக நகராட்சி நிர்வாகத்திற்கு மத்திய அரசு கடந்த 2010ல் 9 கோடி ரூபாய் வழங்கியது. இதன்மூலம் கடற்கரையில் பூங்கா, சிமென்ட் சாலை, தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வயதான பக்தர்கள், யாத்ரிகர்கள் கோயில் ரதவீதிகளை சுற்றிவர வசதியாக 25 லட்சம் ரூபாய் செலவில் 6 பேட்டரி கார்கள் வாங்கப்பட்டது. இந்த கார்களை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. இதற்காக பக்தர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பேட்டரி கார்களை முறையாக பாராமரித்து வந்த நகராட்சி நிர்வாகம், பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டது.
இதனால் 6 பேட்டரி கார்களும் பழுதாகி நகராட்சி வளாகத்தில் முடங்கி கிடக்கிறது. இதனால் கோயிலுக்கு குடும்பத்துடன் வரும் பக்தர்கள் ரதவீதிகளில் லக்கேஜ்களுடன் செல்ல முடியாமல் தடுமாறி வருகின்றனர். பல மாதங்களாக கார்கள் முடங்கியுள்ளதால் அரசு நிதி 25 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலனை கவனத்தில் கொண்டு பேட்டரி கார்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும். இதற்கிடையே கோயில் நிர்வாகம் சார்பில் 3 பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது. விழா மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருவதால் 3 கார்கள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் பேட்டரி கார்கள் இயக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நகராட்சி ஊழியர் கள் கூறுகையில், “பழுதான பேட்டரி கார்களை சரி செய்ய சென்னை யில் இருந்து தான் மெக்கானிக் வரவேண்டும். இதற்கு அதிகம் செலவாகும் என்பதால் காலதாமதம் ஆகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார்கள் இயக்குவதால் பக்தர்களுக்கு பாதிப்பில்லை,” என்றனர்.