பதிவு செய்த நாள்
24
அக்
2011
10:10
ஊட்டி : ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.ஊட்டி மான்குன்றம் என அழைக்கப்படும் எல்க்ஹில் பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வர சுவாமி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வருகிறது.அடிவாரம் பகுதியில் வலம்புரி விநாயகர் கோவில், 108 திருப்படிகள், ஆறுபடைவீடு மண்டபங்கள், ராஜகோபுர 3 நிலை, மகா மண்டபம், முருகன் கருவறை, கருவறை விமானம் 2ம் நிலை மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர், நவநாயகர், காளியம்மன், ஜலகண்டீஸ்வரி, ஜலகண்டேஸ்வர சுவாமி, குகை சித்தி விநாயகர் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 அடி உயரமுள்ள முருகன் திருவுரு வச்சிலை, சிவன் அம்பாள் கோவில் மகா மண்டபம், வெளிப்பிரகார மண்டபம், சால கோபுரம், தேர் மண்டபம் உட்பட பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளன. தற்போது மண்டபம் புதுப்பிப்பு, மடப்பள்ளி அமைத்தல், நடைபாதை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் 30ம் தேதி காலை 9.05 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கயிலை பேரூர் ஆதீனம் குரு சாந்தலிங்க அடிகளார், இளையபட்டம் மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலய தலைவர் குமரகுருபர சுவாமி ஆகியோர் ஆசியுடன், உணவு துறை அமைச்சர் புத்தி சந்திரன் தலைமையில் விழா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நாகராஜ், கோவில் அர்ச்சகர் திருஞான சம்பந்த சிவாச்சாரியார், ஊர் பொதுமக்கள் மகா கும்பாபிஷேக குழுவினர், திருப்பணி உபயதாரர்கள் குழுவினர் மேற் கொண்டுள்ளனர்.