பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
வாராங்கல்: தெலுங்கானா மாநிலம் உருவானதற்கு நன்றி செலுத்தும் வகையில், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், வீரபத்ர சுவாமிக்கு தங்க மீசை காணிக்கை செலுத்தினார். தெலுங்கானாவில், டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக, டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ், பல கோவில்களில் வேண்டுதல் செய்திருந்தார். பல கட்ட போராட்டங்களுக்குப் பின், தெலுங்கானா தனி மாநிலம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஒவ்வொரு கோவிலாக சென்று, தன் வேண்டுதலை, ராவ் நிறைவேற்றி வருகிறார்.
சில தினங்களுக்கு முன், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அவர், ஏழுமலையானுக்கு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை காணிக்கையாக செலுத்தினார். இந்நிலையில், பிப்24, மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலுக்கு குடும்பத்தாருடன் சென்ற ராவ், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க மீசையை, சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தினார். கோவில் கோவிலாக சென்று, காணிக்கை செலுத்தி, மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக, முதல்வர் ராவ் மீது, எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டியுள்ளன.