பேரம்பாக்கம் : நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சுவாதி திருநாளான நேற்று கொட்டும் மழையிலும், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பழமை வாய்ந்த இக்கோவிலில், நரசிம்ம பெருமாள் தாயாரை அணைத்த கோலத்தில் ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். செவ்வாய் மற்றும் நாகதோஷ பரிகாரத் தலமாக விளங்கும் இங்கு மாதந்தோறும், பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதியன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். இம்மாதம் நேற்று காலை, 10 மணிக்கு மூலவர் நரசிம்ம பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து யாக பூஜை நடந்தது. பகல் ஒரு மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4 மணிக்கு பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொட்டும் மழையிலும் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்துச் சென்றனர்.