செஞ்சி : இஞ்சிமேடு கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சி மேட்டில் பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.இங்குள்ள கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும், கோபூஜையும் நடந்தது. காலை 9 மணிக்கு இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு ஹோமம் நடத்தினர். இதில் உலக அமைதிக்காகவும், மக்கள் நோயின்றி வாழவும் நரசிம்ம, மகாலட்சுமி, தன்வந்திரி, கருட பூஜைகளும், ஒரு லட்சம் மந்திரங்களும் படித்தனர். ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.