பதிவு செய்த நாள்
01
மார்
2017
01:03
உடுமலை : அரசுக்கு தானமளிக்கப்பட்ட நிலங்கள் மூலம் நிரந்தர வருவாய் அளிக்கும், கோவில்களை, புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த, இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பழமை வாய்ந்த கோவில்களுக்கு, மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், அமராவதி ஆற்றுப்படுகை மற்றும் மானவாரி நிலங்கள் அதிகளவு தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் கோவில் பராமரிப்பு மற்றும் பூஜைகள் தடையில்லாமல், நடக்க வேண்டும் என்பதே நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதன் நோக்கமாகும். இவ்வாறு, நிலங்கள் உள்ள கோவில்களின் பராமரிப்பு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும், இந்நிலங்கள் சாகுபடி மற்றும் பாசனம் அடிப்படையில், குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம், அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இவ்வாறு, நிரந்தர வருவாய் அளிக்கும் கோவில்களும், பராமரிக்கப்படாமல், பரிதாப நிலையில் இருப்பது அனைத்து தரப்பினரையும், வேதனையடைய செய்கிறது.
கண்டியம்மன் கோவில்: சோமவாரப்பட்டியிலுள்ள இக்கோவில், நிலங்களை பரம்பரை அர்ச்சகர்களிடமிருந்து கையகப்படுத்த, எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தல் உட்பட பல்வேறு முயற்சிகளை இந்து அறநிலையத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இக்கோவில் பராமரிப்பு மற்றும் முக்கிய பூஜைகளுக்கான செலவினங்களுக்கு, துறை சார்பில் சொற்ப அளவிலான நிதியே வழங்கப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கோவிலுக்கு, மின்கட்டணம் கூட முறையாக செலுத்தப்படுவதில்லை. உபயதாரர் அமைத்து கொடுத்த, போர்வெல் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.
ஆல்கொண்டமால் கோவில்: பொங்கலையொட்டி நடக்கும் திருவிழாவில், அரசுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கோவில் கிணறு உட்பட பல்வேறு மேம்பாட்டு பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. முறையான குடிநீர், கழிப்பிட வசதி கூட அங்கு இல்லை.
வல்லக்கொண்டம்மன் கோவில்: கோட்டமங்கலத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு சொந்தமான, 95க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. ஆனால், கோவில் கதவு கூட முறையாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. பழமை வாய்ந்த, கோவிலின் சிற்பத்துாணை சுற்றிலும் காலியாக இருந்த இடம், முழுவதும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு, வழிபாடு நடத்த கூட போதிய இடமில்லை. கோவிலுக்கு சொந்தமான இடம், பாதுகாக்கப்படாமல், ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகும் அவல நிலையில் உள்ளது. பெரியபட்டியிலுள்ள பழமையான பெருமாள் கோவில், ’குடிமகன்’களின், பாராக மாற்றப் பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த, செங்கல் கட்டமைப்பு சிதைந்து வருகிறது. இதே போல், கிராமங்களில், 5 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை நிலமுள்ள கோவில்களும், பராமரிக்கப்படாமல் உள்ளது. உடுமலை பகுதியிலுள்ள, பழமை வாய்ந்த கோவில்களை படிப்படியாக புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோட்டமங்கலத்தில், நுாறு ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கொண்ட, கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷகத்தை சமீபத்தில், இந்து அறநிலையத்துறையனர் செய்தனர். இதனால், பிற கோவில்கள் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.