சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2017 03:03
மதுரை: சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று முதல் 40 நாள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் தொடங்குகின்றனர். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்., 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் முந்தைய வாரம் பெரிய வாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்படுவார். மூன்றாவது நாள் அவர் உயிர்த்து எழுவதை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். பெரிய வாரத்தின் முந்தைய 40 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் தவக்காலம் இன்று தொடங்குகிறது. கடந்த குருத்தோலை நாளில் வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து அதில் கிடைக்கும் சாம்பலை நெற்றியில் சிலுவையாக குறிக்கும் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இந்த தவக்காலம் தொடங்குகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து அசைவ உணவுகளை தவிர்த்து ஏழை எளியோருக்கு உணவு வழங்குவர். திருமணம் மற்றும் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறாது. 40 நாட்களிலும் சிலுவை பாதத்தை நினைவு கூரும் ஆராதனை ஆலயங்களில் நடைபெறும். இதர ஆலயங்களுக்கு புனித பயணம் சென்று வழிபாடு நடத்துவர்.