பதிவு செய்த நாள்
02
மார்
2017
11:03
பவானி: பவானி நகரின், காவல் தெய்வமான செல்லியாண்டியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆயிரக் கணக்கான பக்தர்கள், பல வகையான வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், பவானி செல்லியாண்டியம்மன், எல்லையம்மன், மாரியம்மன் கோவில்களின் பொங்கல் விழா கடந்த மாதம், 14ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, அம்மன் அழைத்தல் நேற்று காலை, 10:00 மணிக்கு செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து, குதிரை மற்றும் சக்தி கூடையுடன் ஊர்வலமாக புறப்பட்டு, எல்லையம்மன் கோவில் சென்று, அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு சக்தி அழைப்பு நடந்தது. உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல வண்ணங்களில், பல வகையான வேடங்கள் அணிந்தும், தங்களின் உடம்பில் சேறு பூசியும், ஊர்வலமாக சென்றனர். அப்போது, வழிநெடுகிலும் நின்ற பெண்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பக்தர்கள் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம், காய், கனிகள், மிட்டாய், புது துணிகள், பேனா, பேன்ட், சர்ட் உட்பட பல்வேறு வகையான பொருட்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், அலகு குத்தி, அக்னி சட்டி ஊர்வலமும் நடந்தது.