பதிவு செய்த நாள்
02
மார்
2017
12:03
ஆத்தூர்: வாழப்பாடியில், 20 ஆண்டுகளுக்கு பின், பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் முப்பூஜை திருவிழா நடந்தது. வாழப்பாடி, அக்ரஹாரம், புதுப்பாளையம் ஆகிய கிராமங்களை பூர்வீகமாக கொண்ட, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், குல தெய்வமாக வழிபடும் பெரியாண்டிச்சி அம்மன் கோவில், வாழப்பாடி, ஆத்துமேடு மற்றும் நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்தில் உள்ளது. முதல் நாள் மங்களபுரம், இரண்டாம் நாள் வாழப்பாடி கோவிலுக்கு, ஆடு, கோழி மற்றும் பன்றி ஆகியவற்றை பலி கொடுத்து, முப்பூஜை விழா நடத்துவர். அதன்படி, 20 ஆண்டுகளுக்கு பின், முப்பூஜை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அக்ரஹாரத்தில் இருந்து, பம்பை உடுக்கை முழங்க, மங்களபுரம் கோவிலுக்கு, சக்தி அழைத்து சென்று, முப்பூஜை வழிபாடு நடத்தினர். நேற்று, வாழப்பாடி ஆற்றுக்கரையில் உள்ள பெரியாண்டிச்சி அம்மனுக்கு பூஜை நடந்தது. பாரம்பரிய முறைப்படி மூங்கில் கூடைகளில், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை வைத்து, பெண்கள் தலையில் சுமந்து சென்றனர். பலர், சாமியாடியபடி ஊர்வலம் சென்றனர்.