திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் மாசித் தெப்ப உற்சவம் துவங்கியது. சிவகங்கை சமஸ்தானம் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் 11 நாள் உற்சவமாக மாசித் தெப்ப உற்சவம் நடைபெறும்.நேற்று காலை 8:00 மணிக்கு பெருமாள் தேவியருடன் திருமண மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கருட கொடிப்பட்டம், சக்கரத்தாழ்வார் திருவீதி வலம் வந்தனர். திருபலி ஆவாகானம் முடிந்த பின்னர் கொடிமரத்திற்கு எழுந்தருளினர். கொடிமரத்திற்கு அபிஷேக,ஆராதனை நடந்த பின்னர் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிக்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.காலையில் திருவீதி புறப்பாடு, இரவில் பல்வேறு வாகனங்களில் திருவீதி புறப்பாடும் நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் தேவியருடன் திருவீதி வலம் வந்தார். மார்ச்11ல் வெண்ணெய்தாழி சேவையில் திருவீதி புறப்பாடும்,மார்ச் 12 காலை பகல் தெப்பம், இரவு 10 மணிக்கு இரவு தெப்பம் நடைபெறும். மறுநாள் காலை தீர்த்தவாரியுடன் தெப்ப உற்சவம் நிறைவடையும்.