தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா அ.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரத்தில் கேரளத்து தில்லை மாகாளியம்மன் கோயில் உள்ளது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் இக்கிராம பெரியவர்கள் வைகை ஆற்றுக்கு சென்ற போது பெட்டி மிதந்துவந்தது. அதனை எடுத்து வந்து வீட்டில் வைத்த போது, மக்களுக்கு அம்மன் கனவில் காட்சி தந்தார். அதன் பிறகு மக்கள் இந்த தெய்வத்தை வழிபட துவங்கினர். முதலில் பீடமாக இருந்தது பின்னர் கோயிலாக மாறியது. இக்கோயிலில் தில்லை மாகாளியம்மன், முருகன், தெய்வானை, தட்சிணா மூர்த்தி, நவக்கிரகங்கள் உள்ளன. இக்கிராம காவல் தெய்வமாகவும், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் சக்தி படைத்த தில்லை மாகாளியம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் வளர்பிறையில் விழா கொண்டாடப்படுகிறது. விழா சாட்டுதலுக்கு பிறகு 15 நாட்கள் கழித்து விழா துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தளத்திற்கு வந்து சென்றால் நிவாரணம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை.பெரியகுளத்தில் இருந்து 20, தேவதானப்பட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு பூஜாரி சிங்கமுத்துவை 97915 68755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.