பதிவு செய்த நாள்
04
மார்
2017
12:03
ஊட்டி :பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று துவங்கியது; வரும், 6ம் தேதி தேர்பவனி நடக்கிறது.நீலகிரி மாவட்டம், சோலுார் மலை அடிவாரம், மசினகுடி அருகே அமைந்துள்ளது பொக்காபுரம். இங்கு எழுந்தருளியுள்ள, ஆதிபராசக்தியின் முக்கிய அவதாரமான பொக்கா அம்மனை மசினகுடி, மாயார், சிறியூர், ஆணைகட்டி, சொக்கநல்லி, சோலுார் போன்ற கிராமங்களில் மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதில், லங்கூர் இனத்தை சேர்ந்த முல்லை குரும்பர் முதல் முதலாக அம்மனுக்கு கோவில் கட்டியும் வழிபட்டு வருகின்றனர். கோவிலில் மூலஸ்தானத்தில் மாரியம்மனுடன் மசினியம்மன், சிக்கம்மன், கரியபெட்டன் ஐயன் ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் ரிஷப லக்னத்தில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் பொக்கா அம்மன், மசினி அம்மன் சிக்கம்மன், சீரியம்மன், ஆனைக்கல் அம்மன், கொக்கரல்லி அம்மன், தண்டுமாரியம்மன் ஆகியோர் ஒரு சேர வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக ஐதீகமாக உள்ளது.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று துவங்கியது. நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. 4ம் தேதி திருவிளக்கு ஏற்றப்பட்டு பூஜைகள் நடக்கிறது. 5ம் தேதி கங்கை பூஜை நடத்தப்படுகிறது. திருவிழா நாளான 6ம் தேதி இரவு, 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இதில், மக்கள் பிரதிநிதிகள் அரசு துறை அதிகாரிகள், சோலுார் கிராம மக்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக, பக்தர்கள் மசினகுடி பகுதியில் இருந்து கரகம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி உட்பட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, ஊட்டி, கூடலுார், கோத்தகிரி பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.