பதிவு செய்த நாள்
07
மார்
2017
11:03
திருத்தணி: முருகன் மலைக்கோவிலில் நேற்று மாசி பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் அன்ன வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு பாலித்துவருகிறார். அந்த வகையில் ஐந்தாம் நாளான நேற்று, காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. காலை, 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் அன்ன வாகனத்திலும், வெள்ளி மயில் வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, மாலை, 4:30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு, 7:30 மணிக்கு யானை வாகனத்திலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை தங்கத்தேரும், 9ம் தேதி அதிகாலையில் உற்சவருக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.